20 லட்சம் ஐடி வேலைவாய்ப்பு: நிதியமைச்சர் மரிய வில்சன்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 20 லட்சம் ஐடி வேலைவாய்ப்பு.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பாக பேசுகையில், “தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் வளர்த்தால்தான் வெற்றி உறுதியாகும். அதைப் பின்பற்றித்தான் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.
Advertisement
Advertisement
ஆண்டுதோறும் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை உருவாக்கியுள்ள இந்த நிறுவனங்களானது, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவிக்க இவ்வரசு பல முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.
செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஒரு எதிர்கால தொழில்நுட்பமாக அல்லாமல் நமது குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் மாற்றமடைந்துள்ளது.
நிர்வாகத்தை விரைவானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதற்கு, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்த இவ்வரசு உறுதிபூண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இயங்குபடம், காட்சி விளைவுகள், சித்திரக்கதை, விளையாட்டு மற்றும் மெய்நிகர் உண்மை (AVGC-XR) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN AI Mission) வலுப்படுத்தப்படும்.
இந்த நிறுவனம் சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகர்ப்புர நிர்வாகம் மற்றும் சமூகநல நிர்வாகம் போன்ற துறைகளிலும், தேவையான இதர துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தும்.
செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்யவும், பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகளை இணையவழியில் மக்களுக்கு வழங்கும் வகையில் அனைத்து இ-சேவை மையங்களும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள்நல சேவைகளுடன், இ-சேவை 20 மையங்களாக அரசு மேம்படுத்தும். தற்போது, 20 துறைகளைச் சார்ந்த 76 சேவைகளை வழங்கும் நம்ம அரசு வாட்ஸ்ஆப் சாட்பாட் வசதியானது, 275 மக்கள்நல சேவைகளை வழங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ. 398 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Finance Minister Maria Wilson stated in the Tamil Nadu budget that over 20 lakh people have gained direct and indirect employment through information technology companies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.