தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசு
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து...
தமிழக அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆக. 5) குற்றம் சாட்டினார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.7 ஆயிரம் கோடியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று (ஆக. 5) தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் தங்கம் தென்னரசு பேசியதாவது:
''தமிழ்நாடு முன் எப்போதும் இல்லாத வகையில் கடன் வாங்கியுள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியை விட திமுக ஆட்சியில் கடன் அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.
கடன்சுமைக்கு திமுகவே காரணம் என தவெக கூறுகிறது. ஆனால் கடன் வாங்கக்கூடிய விகிதம் உயர்ந்துகொண்டு செல்லக்கூடிய நிலையே வரும். மத்திய அரசின் விதிகளுக்குட்பட்டு மாநிலங்கள் கடன் வாங்குகின்றன.
கடன் வாங்குவதை குறைக்க முடியாது. மத்திய அரசின் அனுமதியுடன் தான் கடன் வாங்குகிறோம் என நிதித்துறை செயலாளரே இன்று கூறியுள்ளார்.
தமிழக அரசு இந்த ஆண்டு ரூ. 1,22,000 கோடி கடன் வாங்கியுள்ளது. ரூ. 3000 கோடி மூலதனச் செலவை குறைத்துக் காட்டியுள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் வாங்கவேண்டிய சூழல் தவெகவுக்கு ஏற்படும்.
நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப்போகச் செய்துள்ளது. வெள்ளை அறிக்கையில் திமுக அரசை குறை கூறிவிட்டு அதையேதான் இப்போது தவெக அரசு செய்துள்ளது. வருவாயை கூட்டுவதற்கான வழிகள் பட்ஜெட்டில் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு வெறும் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது போதாது. தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை'' என தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
Budget disappointment: School Education Department funds cut Thangam Thennarasu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.