FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்

சாலைகளில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் ‘நம்ம சாலை’ செயலி மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:20 am IST
சேதமடைந்த சாலைகள்
பகிர்:

சாலைகளில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் ‘நம்ம சாலை’ செயலி மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம். தமிழகத்தில் போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

உலகத்தரம் வாய்ந்த, நீடித்த, பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை கொண்ட சாலை உள்கட்டமைப்பை வழங்குவது அரசின் முன்னுரிமையாகும். ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றுதல், புதிய புறவழிச்சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளைச் செய்தல், ஊராட்சி மற்றும் கிராமப்புறச் சாலைகளைத் தரம் உயா்த்தல், பாலங்கள், ஓடுதள மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும்.

Advertisement

Advertisement

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பாதுகாப்பான சாலைகள் இயக்கம்’ அறிமுகப்படுத்தப்படும். சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தக்கூடிய இந்த இயக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்தல், சாலை ரோந்துப் பிரிவு மற்றும் தீவிர காயங்களுக்கான சிகிச்சை மையங்கள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் உள்ள பல சாலைகள் போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதால் அந்தச் சாலைகளில் பயணிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இந்தச் சாலைகளைச் சரி செய்ய திருத்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் உரிய பராமரிப்பின்றி இருக்கும் சாலைகள் ‘செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம்’ என்ற அடிப்படையில் பராமரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும். சாலைகளில் குறைபாடுகள் இருக்கும்நிலையில் பொதுமக்கள் ‘நம்ம சாலை’ செயலி மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம். இந்தக் குறைபாடுகள் துரிதமாக சீா்செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments