ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது பற்றி...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், "மேட்டூர் அணையில் குறைந்த நீர் இருப்பின் காரணமாக எப்போதும் பாசன நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், "வானம் பொய்த்தாலும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட நம் அரசு பொய்க்காது" என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 134 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான "குறுவை தொகுப்புத் திட்டம்" வழங்கினார்.
Advertisement
Advertisement
அதோடு, இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட, தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்திக் கண்காணித்து வருகிறார்.
இதனால், இதுவரை 8 இலட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"வேளாண்மை நடைபெறும் நிலம் 100 சதவீதம் பயிர்க் காப்பீட்டில் கொண்டுவரப்படும்" என்ற அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, 2026-2027 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தை 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களில் செயல்படுத்த, 648 கோடியே 55 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் 15 இலட்சம் விவசாயிகள் பயனடைவதுடன், 36 இலட்சம் ஏக்கர் சாகுபடிப் பரப்பு காப்பீடு செய்யப்படும். மேலும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்யப்படும்.
விவசாயிகளை வாழவைப்பது மழை தரும் வானம்தான் என்றாலும், சில நேரங்களில் அவர்களை வருத்துவதும் வானமாகத்தான் உள்ளது.
ஒரு கோடி விவசாயிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மண்வள அட்டைகள் வழங்கப்படும். மண்வளத்தைப் பாதுகாக்க லட்சம் ஏக்கருக்கு பசுந்தாள் உரம் வழங்கப்படும்.
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.
TN Agriculture budget 2026: minister vinoth speaks about mettur dam open
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.