முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!
முதல்வர் விஜய்க்கு எதிரான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றது பற்றி...
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதல்வர் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார்.
தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு சங்கீதா மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தனது கணவர் விஜய், பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், இதுவரை மூன்று முறை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று காலை காணொலி வாயிலாக விசாரணைக்கு சங்கீதா ஆஜரான நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் முதல்வர் விஜய்யால் ஆஜராக முடியவில்லை என்றும் வேறொரு நாளுக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சங்கீதாவிடம் விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, சுமார் 2 மணிநேரம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நீதிபதி சுஜாதாவிடம் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுஜாதா, முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் லண்டன் தொழிலதிபர் மகளான சங்கீதாவுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay's wife Sangeetha withdraws divorce case against him
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.