FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பழனி கோயில் நில முறைகேடு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பழனி கோயில் நில முறைகேடு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளது பற்றி...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 3:36 pm IST
முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை (ஆக. 8) வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கைத் திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான வழக்குரைஞர் அன்வர்தீனுக்கு இன்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்குரைஞர் மதுரை சிறையில் மரணம் - மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் . பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்குச் சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது.

எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

summary

AMMK leader T.T.V. Dhinakaran urged on Saturday (Aug. 8) that the investigation into the Palani temple land irregularities be handed over to the CBI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments