சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை!
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை வழிபாட்டில் புதன், வியாழன் (ஆக.12, 13) ஆகிய இரு நாள்கள் பங்கேற்க பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்துக்குள்பட்ட சாப்டூர் கிராம மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பிரதோஷம், ஆடி அமாவாசை வழிபாடுகள் 4 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதன்படி, நிகழாண்டின் ஆடி அமாவாசை, பிரதோஷம் வழிபாட்டை ஒட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ள பக்தர்களுக்கு ஆக. 10 முதல் ஆக. 13 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கிடையில், சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயில் அமைந்துள்ள சாப்டூர், வத்திராயிருப்பு மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை பயங்கரக் காட்டுத் தீ பரவியது.
இதன் காரணமாக, சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்கள் திங்கள்கிழமை (ஆக. 10) அறிவித்தன.
மலைப் பகுதியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை அதிகாலை தீயை வனத்துறையினர் முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோயில் ஆடி அமாவாசை வழிபாட்டில் புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்களும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், கோயிலுக்குச் செல்பவர்கள் தாணிப்பாறை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர்.
மீண்டும் அனுமதி ரத்து... இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் சதுரகிரி மலைப் பகுதியில் மீண்டும் தீ பரவி வருவதாகவும், இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, பொதுமக்கள், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலுக்கு ஆக. 12-ஆம் தேதி செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோர் தெரிவித்தனர். மேலும், நிலைமை சீரான பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.