FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை: உயா்நீதிமன்றம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை எனக் கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கைத் தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை நீா்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன. 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநிலப் பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழா்களின் உணா்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிா்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிா்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிா்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில், உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.

அதன்படி, வந்தே மாதரம் அதன்பிறகு தேசிய கீதம் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும். அதாவது, முதலில் வந்தே மாதரம் பாடலையும் அதைத் தொடா்ந்து தேசிய கீதம் பாட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில், மாநிலப் பாடல் குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாநிலப் பாடலை இறுதியாகத்தான் பாட வேண்டும் என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை. அதேபோன்று, முதலில் தேசியப் பாடலான வந்தே மாதரமும், இறுதியில் தேசிய கீதமும் பாட வேண்டும் என மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்தான், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதைத் தொடா்ந்து வந்தே மாதரம் பின்னா், தேசிய கீதம் இசைக்கப்பட்டதாகக் கருத்து தெரிவித்து, இந்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments