3 வீடுகள் வைத்திருக்கும் உதயநிதிக்கு அரசு பங்களா எதற்கு? ஆதவ் அர்ஜுனா கேள்வி
பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்எல்ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது பற்றி...
பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்எல்ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம் எனக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாடு அரசு ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் கூறிவருவதால், திமுகவின் 59 எம்எல்ஏ-க்களும் வாகனங்கள் பெற வேண்டாம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் முடிவெடுத்துள்ளோம்.
மேலும், அரசுக்கு ஏற்படுகிற தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நோக்கில், எம்எல்ஏ-க்களின் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி, பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஏழ்மையான உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருக்கின்றனர். ஒரு சிலர் பேருந்து, ரயில்களிலும் வருகின்றனர்.
முதல்வரைப் பொருத்தவரையில் அவையில் உள்ள அனைவரும் சமம். நான் உள்பட எங்கள் கட்சியில் ஒரு சிலரிடம் வாகனங்கள் உள்ளன. எங்களுக்கும் கார் வேண்டும் என நாங்கள் கேட்கப் போவதில்லை. ஏழ்மையான உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள்.
எங்களிடம் கார் இருப்பதால், நாங்கள் கேட்கப் போவதில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடு. அதே வேளையில், அரசு நிகழ்ச்சிகளில் தனிப்பட்ட வாகனங்களில் செல்வதைவிட, அரசு வாகனங்களில் செல்வதுதான் மரியாதையாக இருப்பதாக மன்னார்குடி எம்எல்ஏ கூறுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் 3, 4 வீடுகள் இருந்தபோதிலும், அவர் அரசு பங்களாவில்தான் இருக்கிறார். அவருக்கு அரசு பங்களா வேண்டும் எனக்கோரி என்னிடம்தான் கடிதம் கொடுத்தார்.
அவரிடம் 3 வீடுகள் இருப்பதால், அவருக்கு அரசு பங்களா எதற்கு என அவரிடம் கேட்க முடியுமா?
எங்கள் முதல்வர் சொன்னார், உதயநிதி கோரிக்கை விடுத்தார், நாங்களும் உடனடியாக கொடுத்து விடுவதாகக் கூறி விட்டோம். இது ஒரு மரபு.
இந்த மரபின்படி, அமைச்சர்களுக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால், எம்எல்ஏ-க்களுக்கு உதவியாளர்கள், வீடு கிடையாது. எங்கள் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சி உறுப்பினர்கள் சிலரிடமும் கார் இல்லை.
இந்தக் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் என்று அறிவிப்பு ஏதுமில்லாமல், அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் என பொதுவாக முதல்வர் அறிவிக்கிறார். தவெகவில் கார் வைத்திருப்பவர்கள் கார் வேண்டும் என விண்ணப்பிக்க மாட்டார்கள். இதுதான் எங்கள் நிலைப்பாடு.
கார் என்பது ஆடம்பரம் கிடையாது. மக்களைச் சந்திப்பதற்கான ஒரு தேவை" என்று தெரிவித்தார்.
Why does LoP Udhayanidhi, who owns 3 houses, need a government bungalow? Aadav Arjuna asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.