FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொய்க்கும் பருவமழை; கொளுத்தும் வெய்யில்! தமிழக நகரங்களை சூழுமா தண்ணீர் பஞ்சம்?

பொய்க்கும் பருவமழை; கொளுத்தும் வெய்யில் தமிழக நகரங்களை சூழுமா தண்ணீர் பஞ்சம் என்பது பற்றி..

Updated On : 24 ஜூலை 2026, 6:21 pm IST
குடிநீர் பற்றாக்குறை - Center-Center-Chennai
பகிர்:

பொய்க்கும் பருவமழை; கொளுத்தும் வெய்யில்! தமிழக நகரங்களை சூழுமா தண்ணீர் பஞ்சம்?

தமிழ்நாட்டில், எல் நினோ தாக்கத்தால், பருவமழையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இயல்பான அளவிலிருந்து குறையும் நிலையில் மறுபக்கம், ஏரிகளில் இருக்கும் மிச்சம் மீதி தண்ணீரையும் வெப்பம் சுண்டி இழுத்துக் கொண்டிருப்பதால், தமிழக நகரங்களை தண்ணீர் பஞ்சம் சூழும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

தற்போதுவரை, தேவையான அளவில் தண்ணீர் இருப்பு இருந்தாலும், அடுத்தடுத்த வாரங்களில் வெய்யில் கொளுத்தி மழையும் இல்லாமல் இருந்தால் இதே நிலை நீடிக்காது என்பதே தரவுகள் சொல்லும் செய்தி.

Advertisement

Advertisement

இது குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிலைமையை கவனமுடன் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மொத்த குடிநீர் கையிருப்பான 224 டிஎம்சி தண்ணீரில், ஜூலை மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி கையிருப்பில் இருப்பது 31 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே.

ஐந்து நீர்த்தேக்கங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஒன்பது நீர்த்தேக்கங்களில் 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் இருக்கிறது.

விவசாயக் குளங்களின் நீர் இருப்பு நிலை இதைவிட மோசம். மாநிலம் முழுவதும் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரம் குளங்களில் 3,483 குளங்கள் வற்றிவிட்டன. 6100 குளங்களில் 25 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரே உள்ளது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதும், நீர்பிடிப்புப் பகுதிகள் ஆக்ரமிக்கப்பட்டதுமே இதற்குக் காரணம். ஒன்று இயற்கை செய்தது, மற்றொன்று மனிதன் செய்தது.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை ஓரளவுக்கு மேல். நகரின் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளின் ஒட்டுமொத்த கையிருப்பான 13.2 டிஎம்சி தண்ணீரில் தற்போது 44 சதவிகிதம் கையிருப்பில் உள்ளது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று ஏரிகளில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது.

இதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும் என்றாலும், அடிக்கும் வெய்யில்தான் ஆபத்து. தண்ணீர் வற்றிவிட்டால் நிலைமை மோசமடையலாம்.

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கிட்டதட்ட சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்பதால் ஓரளவுக்கு நிம்மதிதான்.

திருச்சி மாநகராட்சிக்கு தற்போதே, தேவையை விட விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறைவுதான். இன்னும் ஒரு மாத காலத்துக்குப் பிறகு, இந்த பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம். ஏற்கனவே இருக்கும் கிணறுகள் மற்றும் கூடுதலாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத்தான் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை உள்ளதாம்.

வைகையாற்றிலும் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டதால் மதுரைக்கு குடிநீர் பற்றாக்குறை ஆபத்து உள்ளது. எனினும் முல்லைப் பொரியாறு அணையிலிருந்து மதுரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு திறந்துவிடப்படும் குடிநீரால் ஓரளவுக்கு நிலைமை சமாளிக்கப்படுகிறது.

ஒருவேளை, செப்டம்பரிலும் இதே நிலை நீடித்தால், தமிழகம் கடந்த 15 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

summary

Monsoon fails; scorching heat! Will water scarcity grip Tamil Nadu's cities?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments