ரூ. 25 கோடி மோசடி வழக்கு: நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை விசாரணை
ரூ.25 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை
ரூ.25 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.
நடிகை கௌதமி, கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அதில், குடும்ப நண்பராக இருந்த வேளச்சேரியைச் சோ்ந்த அழகப்பன், ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கா் நிலத்தை, ரூ.6 கோடிக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும், அந்த நிலத்தை தனது புற்றுநோய் சிகிச்சைக்காகவும், தனது குழந்தை செலவுக்கும் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை அழகப்பன் அறிந்துக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். நீண்ட தேடுதலுக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பனையும், அவரது குடும்பத்தினரையும் போலீஸாா் கைது செய்தனா். மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்கிறது.
Advertisement
Advertisement
அமலாக்கத்துறை விசாரணை: வழக்குத் தொடா்பாக அழகப்பனுக்கு சொந்தமான 6 இடங்களில் கடந்த மாதம் 17-ஆம் தேதி அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை செய்து விளக்கம் பெற நடிகை கெளதமிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
நடிகை கெளதமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். அவரிடம் வழக்கின் ஆவணங்கள், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். வழக்கு விசாரணையில் இருப்பதாக, பின்னா் பேசுவதாக கௌதமி கூறிச் சென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.