FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கர்நாடகம் சென்று பேச்சு நடத்தி முதல்வர் விஜய் எதை சாதிக்கப் போகிறார்? - அன்புமணி

தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் சென்று உரிமைகளை அடகு வைக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்திருப்பது குறித்து...

Updated On : 31 ஜூலை 2026, 3:46 pm IST
அன்புமணி ராமதாஸ் | விஜய்
பகிர்:

தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் கர்நாடகம் சென்று உரிமைகளை அடகு வைக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே தீருவேன் என்று முதல்வர் விஜய் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறிவிட்ட கர்நாடக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருக்கிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கர்நாடக அரசும், கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதல்வர் விஜய் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தான் தாரைவார்க்கப்படும். இந்த தவறை முதல்வர் விஜய் செய்யக் கூடாது.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டிஎம்சி நீர் மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால், அந்த அளவுக்கு குறைந்த நீரைத் திறப்பதற்குக் கூட கர்நாடகம் தயாராக இல்லை.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 25,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஆறில் ஒரு பங்கு நீரை மட்டுமே திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையாது. மாறாக தினமும் 1.9 டி.எம்.சி வீதம் அணைகளின் நீர் இருப்பு 15 நாள்களில் 28 டி.எம்.சி அதிகரிக்கும். ஆனாலும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நீரைக் கூட தருவதற்கு கர்நாடக அரசுக்கு மனமில்லை.

காவிரி பிரச்னையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதல்வர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

summary

When Karnataka is firmly determined not to provide even a single drop of water, what does Chief Minister Vijay hope to achieve by traveling there for talks?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments