முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில் மரியாதை!
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது பற்றி...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இன்று (ஜூன் 3) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை, அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.