24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள்! நன்றி தெரிவித்த அண்ணாமலை!
அண்ணாமலையின் இயக்கத்தில் 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்தது பற்றி...
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் தனது இயக்கத்தில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அந்தக் கட்சியிலிருந்து விலகினார். ஏற்கெனவே அவர் தொடங்கிய இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பில் தனது ஆதரவாளர்கள் இணையுமாறு லிங்க்கை வெளியிட்டு நேற்று அழைப்பு விடுத்தார். அவர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டபோது 14 ஆயிரம் பேர் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்தனர். தொடர்ந்து சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தனது இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,
"கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும் அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம்.
மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது.
உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.