முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

ப. சிதம்பரம் உடனான சந்திப்புக்குப்பின் இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி

Updated On : 6 ஜூன் 2026, 12:31 pm IST
மு. வீரபாண்டியனை நேற்று பிரவீண் சக்ரவர்த்தி சந்தித்தபோது... - கோப்புப் படம்
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனை காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் இன்று(ஜூன் 6) சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தவெக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பையடுத்து பிரவீண் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், 'தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ.) கூட்டணி'யின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்துக் குறிப்பிட்டதற்கு, 'பிரவீண் குறிப்பிட்ட தவெக கூட்டணியில் தங்கள் கட்சி இடம்பெறவில்லை' என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.

Advertisement

Advertisement

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனையும் சந்தித்துப் பேசினார். மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு கோரி இருவரிடம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் இன்று(ஜூன் 6) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனைச் சந்தித்துப் பேசியுள்ளார். 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய மு. வீரபாண்டியன், "தற்போது தேசிய அளவில் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்துகொண்டேதான் அரசு அமைய தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம்.

தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

சட்டம் - ஒழுங்கு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் ஊடகங்களை, பத்திரிகையாளர்களைக் கடந்து செல்லக் கூடாது. ஊடகங்களைச் சந்திப்பது ஜனநாயகத்திற்கு மேலும் வலுசேர்க்கும். தவெக கூட்டணிக்கு அழைத்தால் அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ, சண்முகத்தையும் ப. சிதம்பரம் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

CPI State Secretary M. Veerapandian press meet after meeting with P. Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.