சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!
சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...
சோழவரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் இன்று (ஜூன் 26) காலை தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்றிரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காரனோடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது இன்று காலை தீ விபத்தில் சிக்கியது.
பேருந்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.
Advertisement
Advertisement
பின்னர் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்குமாறு எச்சரிக்கை விடுத்தார். ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் 32 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர்.
இதனால் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவி பேருந்தின் பெரும்பகுதியை சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம், மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீக்கிரையானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Fire breaks out in an omni bus near Sholavaram, Thiruvallur!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.