சொத்து வரி பாக்கி: ஹைதராபாத்தில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்து பறிமுதல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துகளை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்தினை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்து ஒன்று ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனி, வெங்கடேஸ்வரா ஹில்ஸ் பகுதியில் யூசுஃப்கதா வட்டத்தில் உள்ளது. இது ஜெயலலிதா பெயரிலேயே பதிவு செய்யப்பட்டதாகும்.
இந்த சொத்துக்கு வரி கடந்த 2017-க்கு பிறகு கட்டப்படவில்லை. இதனால், வரி பாக்கி ரூ. 82 லட்சத்தைக் கட்டாமல் விட்ட காரணத்தால் ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் அந்தச் சொத்தை பறிமுதல் செய்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் 2025-26 ஆம் ஆண்டு வரி செலுத்த அறிமுகப்படுத்திய ஒரே தவணையில் வரியை செலுத்தும் திட்டத்தில் சொத்து வரி நிலுவயில் 90% வட்டியை தள்ளுபடி செய்கிறது. இதன்மூலம் சொத்து உரிமையாளர்கள் நிலுவைத் தொகை மற்றும் 10% சதவீத வட்டியை மார்ச் 31, 2026-க்குள் செலுத்த வேண்டும். இதன்படி, ரூ. 82.91 லட்சம் நிலுவை வரி ஜெயலலிதாவின் சொத்திற்கு செலுத்தப்படவேண்டியிருந்தது.
இதனை வசூலிக்க பலமுறை முயற்சி எடுத்தபோதிலும் யாரும் வரியை செலுத்த முன்வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம், ஹைதராபாத் மாநகராட்சி துணை ஆணையர் சொத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அப்னுப்பினார். ஆனால், அதற்கு எந்த பதிலும் வராததால் அவர்கள் சொத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உதவி மாநகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர்களின் முன்னிலையில் ஜெயலலிதாவின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. செலுத்த வேண்டிய வரி நிலுவை செலுத்தப்படும் வரை அந்தச் சொத்து ஹைதராபாத் மாநகராட்சியின் வசம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.