150 முதல் 200 இடங்களில் தவெக வெற்றி: செங்கோட்டையன் நம்பிக்கை
தேர்தலில் 150 முதல் 200 இடங்களில் தவெக வெற்றி பெறும் என செங்கோட்டையன் பேச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 150 முதல் 200 இடங்களில் தவெக வெற்றி பெறும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசியதாவது, "தமிழக வெற்றிக் கழகத்தைப் பொருத்தவரையில், தியாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிற ஓர் இயக்கம். தொலைநோக்குச் சிந்தனையோடு மக்களுக்குப் பணியாற்றக்கூடிய தலைவர்.
இந்த 2026 தேர்தல், சரித்திரத்தில் அமையக்கூடிய ஒரு வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்கிற காலமாக இது அமையும்.
Advertisement
வரலாற்றிலே, இந்தியாவில் முதலிடத்தைப் பெறக்கூடிய ஒரே தலைவராக தவெக தலைவர் விளங்குவார்.
என்னைப் பொருத்தவரையில் மக்கள் கருத்துக் கணிப்புகள் தெளிவாக இருக்கின்றன. உங்கள் வீட்டில் உங்களைக் கேட்காமலேயே விசிலுக்கு வாக்களித்திருக்கின்றனர்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் முதன்முறையாக வாக்களிப்பவர்களும், புதிய மாற்றத்தை, எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற எண்ணங்கள் மக்களிடையே இருக்கிறது. அது மே 4-ல் பிரதிபலிக்கும். இந்திய வரலாற்றில், வெற்றி என்ற இலக்கை அவர் (விஜய்) எட்டிப் பிடிப்பார்.
நயினார் நாகேந்திரனை பொருத்தவரையில், இதுதான் அவருக்கு இறுதித் தேர்தல். இதன்பிறகு, அவரின் கட்சிப் பதவி இருக்குமா? இருக்காதா? என்பதை அவர்களின் மேலிடம் சொல்லும்.
எல்லோரும் மனம் திறந்து, நம் தலைவர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம்தான், இசையமைப்பாளர் வெளியிட்ட பாடல். அது அவருடையது மட்டுமல்ல, மக்களுடைய பிரதிபலிப்பும்தான்.
சுயநலமும் கர்வமும் இருக்கும் சாம்ராஜ்ஜியம் அழியும். அதனை யாராலும் தடுக்க முடியாது.
எங்கள் கட்சியினர் தெளிவாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, அவருக்காக உயிரைத் தியாகம் செய்ய தயாராகவும் இருக்கின்றனர். உலக வரலாற்றில், முந்தைய 2 தலைவர்களுக்குப் பிறகு இவருக்குத்தான் நான் பார்க்கிறேன்.
கண்டிப்பாக, 150 முதல் 200 இடங்கள் வரை நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.