நாளைமுதல் சுட்டெரிக்கும் சூரியன்! கத்தரி வெய்யில் ஆரம்பம்
தமிழகத்தில் நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது...
தமிழகத்தில் நாளை தொடங்கி மே 28 வரையில் கத்தரி வெய்யில் காலம் நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில், மாநிலத்தில் ஓரிரு இடங்களில் 105 டிகிரியை கடந்தும், சில இடங்களில் 100 டிகிரியை கடந்தும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெய்யில் நாளைமுதல் மே 28 வரையில் நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரிவரையில் பதிவாகலாம்.
Advertisement
இருப்பினும், அடுத்த வாரம் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பிருப்பதால், வெய்யில் கட்டுக்குள் இருக்கும்.
வெய்யில் நேரத்தில் வெளியே சென்றால், வெளிர்நிற குடைகளைப் பயன்படுத்தலாம். நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்கலாம்.
வெய்யிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்தமான தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல், இளநீர் அதிகம் பருகலாம்.
குழந்தைகளும் முதியோர்களும் பகல் 12 மணிமுதல் 4 மணிவரையில் வெளியில் வருவதைத் தவிர்க்கலாம்.
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கலாம்.