எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாக உள்ளது: டி.கே.எஸ். இளங்கோவன்
எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாக உள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தது குறித்து...
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாக உள்ளது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்று கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இது தொடர்பாக பல சிக்கல்கள் நீடித்து வந்தன.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர், திங்கள்கிழமை (மே 25) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து அவர்களுடைய ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். மேலும், அதே நாளில் அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவும், சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தார்.
இதுகுறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்ததாவது:
மூன்று பேர் மட்டுமல்ல; மேலும் ஒருவர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியினை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளார். பிரச்னை, எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். அவருடைய விருப்பத்துக்கு எதிராக முதல்வர் விஜய்யை ஆதரித்தவர்களில் இந்த நான்கு பேரும் அடங்குவர். எடப்பாடியின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாக உள்ளது. தொண்டர்களின் பார்வையில் கட்சி எடப்பாடியின் தலைமைக்கு எதிராக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.