எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா; இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை: அப்பாவு
முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு பதிவு குறித்து...
எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா விவகாரத்தில் இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது.
ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சிவி சண்முகம் அணி என இரண்டாக உடைந்தது.
Advertisement
Advertisement
தவெகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவுக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பு பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருந்தனர்.
தொடர்ந்து அதிமுக சார்பில் கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் நேற்று (மே 25) சந்தித்துப் பேசினர்.
அதன்பின்னர், எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையாவும், சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து இன்று ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு, “அதிமுக பொதுச்செயலாளர் அவர்கள் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக சபாநாயகர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு நிலுவையில் இருக்கும் பொது மாண்புமிகு தமிழக சபாநாயகர் அவர்கள் அதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.