புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
461 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு இன்று(மே 27) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 23 இளநிலை புகைப்படக் கலைஞர்கள் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 27) முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் காலியாகும் புகைப்படக் கலைஞர் பணியிடங்கள் கடந்த 56 ஆண்டுகளாக ஆளும்கட்சியினரால் நியமிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், நிர்வாகிகளின் உறவினர்கள் இந்தப் பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 23 இளநிலை புகைப்படக் கலைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, வேளாண் பொறியியல் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணி துறை, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தொல்லியல்துறை, சுற்றுலாத்துறை, குடும்ப நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் 45 பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு இன்று முதல் ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை திருத்திக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 இளநிலை புகைப்பட கலைஞா் பணி: இந்த அறிவிக்கையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள 23 இளநிலை புகைப்படக் கலைஞர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடங்கள் இடம்பெறும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.