வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம், கட்சிகள் பதிலளிக்க உத்தரவு!
வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து விவகாரத்தில் தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது, பணப்பட்டுவாடா நடந்துள்ளது ஆகியவை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தவெக, திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுக-வுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியதாக தவெக கட்சியினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர், வெறும் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும்; தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர்.இளங்கோ, குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை; ஊழல் நடவடிக்கையை பொருத்தவரை வெற்றிபெற்ற வேட்பாளரை எதிர்மனுதாரதாக சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபாலும் இதே வாதங்களை முன்வைத்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக, அதிமுக, தவெக, தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Cash Distribution to Voters: Madrs HC orders Election Commission, Parties to reply this matter
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.