புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் கே.என்.நேருவும், திமுகவும் அஞ்சிட மாட்டோம்: மு.க.ஸ்டாலின்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
கே.என். நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்" என்று கூறியுள்ளார்.
சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
DMK Chief MK Stalin opposes the raid by the Directorate of Vigilance and Anti-Corruption at K.N. Nehru's residence
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.