பிஏபி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்!
பிஏபி. தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக் கூடாது எனக் கூறி விவசாயிகள் போராட்டம்...
பொள்ளாச்சி: பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ள நேரத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கூடாது எனக் கூறி பிஏபி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50,000 ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தென்மேற்கு பருவமழை காலங்களில் பிஏபி தொகுப்பு அணைகள் நிரம்பிவிடும். பிஏபி தொகுப்பு அணைகள் நிறைந்தால் ஒரு ஆண்டுக்கு பாசனத்திற்கு தண்ணீர் போதுமானதாக இருக்கும்.
Advertisement
Advertisement
பிஏபி திட்டத்தில் ஒருமடை விட்டு ஒரு மடை என்ற பாசன முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அணைகளில் நீர் இருப்பு இருந்ததால் முதலாம் மண்டல பாசனத்திற்கு ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு இரண்டு லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் வழங்க வேண்டும். பருவமழை பொய்த்துப் போனதால் தொகுப்பு அணைகளில் நீர்இருப்பு குறைவாக உள்ளது.
இந்நிலையில் பிஏபி திட்டத்தில் துணை திட்டமாக உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
பிஏபி திட்டத்தில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு இந்த முறை உயிர் தண்ணீர் என்ற அடிப்படையில் ஒரு சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கும் சூழல் உள்ளது.
அதுவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தண்ணீர் திறந்து இருக்க வேண்டும். குறைவான நீர் இருப்பு மற்றும் கால்வாய்கள் தூர்வார அரசு நிதி ஒதுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் கால தாமதம் ஆகியும் தண்ணீர் திறக்கவில்லை. திட்டத்தில் உள்ள பாசனம் பெற வேண்டிய பகுதிகளில் உள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில் துணை திட்டமாக கருதப்படும் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க பிஏபி திட்டக்குழுவை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்த கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை பிஏபி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பொள்ளாச்சி எம்எல்ஏ நித்தியானந்தன் பங்கேற்றார்.
திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறுகையில், பிஏபி திட்டத்தில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இருக்கும் காலத்தில் உபரியாக உள்ள நீரை மட்டுமே உப்பாறு அணைக்கு வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவும் அரசு ஆணையும் உள்ளது. அதேபோல் திட்டத்தில் நீர் திறப்பு முடிவு செய்யும்போது திட்டக் குழுவில் உள்ளவர்களை ஆலோசிக்காமல் அதிகாரிகள் முடிவு எடுக்கக் கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. இது போன்ற உத்தரவுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
Farmers stage a sit-in protest at the PAP office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.