ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க செப்.16 வரை சிறப்பு தணிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு தணிக்கை குறித்து...
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் செப்.16 வரை சிறப்பு தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்காக கைப்பேசி எண்ணையும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சுமார் 4900 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 1000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவ்வாறு செல்லும் பயணிகளின் நலன் கருதி சீரிய முறையிலும், சரியான கட்டணத்திலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மூன்று நாள்களில் தமிழ்நாடு முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 639 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கம் ரூ.14,39,100- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.27,58,243 வசூலிக்கப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.3,19,000 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.30,77,243 வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தணிக்கையின் போது, செப்.12 -ல் அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக செப்.16 வரை மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் நாள்களில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அதிக கட்டண வசூல் குறித்து 9384808333 என்ற கைப்பேசி எண்ணிலும், tc.tn@nic.in
மின்னஞ்சல் முகவரியிலும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Special inspections to curb excess fare collection in omni buses until September 16; complaint numbers announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.