கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!
கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது பற்றி...
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி, தொடா் விடுமுறையையொட்டி, செப்.11,12 ஆகிய இரு நாள்களில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் சுமாா் 2.31 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
விடுமுறை முடிந்து இன்று மற்றும் நாளை (செப்.14, 15) பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவிலான மக்கள் சென்னை திரும்புவா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், சிறப்புப் பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Additional city buses from Kilambakkam starting this evening!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.