சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!
சென்னை குற்றப்பிரிவு காவல்துறை முன்பு அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானது பற்றி...
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்னிலையில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார்.
தனியாா் பள்ளி நிா்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயா்வு மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்த புகாரில், சென்னை பெருநகர மத்தியக் குற்றப் புலனாய்வு போலீஸாா் ஏற்கெனவே வழக்குப்பதிந்து பி.டி. அரசகுமாா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையின் அடுத்தகட்ட நகா்வை மத்தியக் குற்றப்புலனாய்வு போலீஸாா் தொடங்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதன்படி முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சியிலுள்ள வீடுகள், உறவினா், உதவியாளா் வீடு என மொத்தம் 6 இடங்களில் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
அன்று மாலை 4 மணி வரையில் நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்து, அதன் விவரங்களை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் ஒப்புதல் பெற்றனா்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், அரசக்குமாரின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ex DMK Minister Anbil Mahesh appears before the Chennai Crime Branch!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.