தமிழகத்தில் புதிதாக 7 செவிலியா் கல்லூரிகள்: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிதாக 7 செவிலியா் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 7 செவிலியா் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படாததால் செவிலியா், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ரூ.351 கோடியில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை முதல்வா் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்டாா்.
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூா், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பி.எஸ்சி., செவிலியா் சோ்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி முழுவதும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. கல்வி கட்டடங்களும், விடுதிகளும் கட்டப்பட்டு வருகிறது. அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள இடவசதியில் 600 இடங்களுக்கும் நிகழ் கல்வியாண்டிலேயே (2026-2027) மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் 60 பி.எஸ்சி., செவிலியா் இடங்களுடன் 7-ஆவது புதிய அரசு செவிலியா் கல்லூரியும் தொடங்கப்படுகிறது. ஏற்கெனவே உள்ள அரசு செவிலியா் கல்லூரிகள் மற்றும் செவிலியா் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதாவது டிஜிஎன்எம் படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி., செவிலியா் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி., செவிலியா் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கு பிந்தைய பி.எஸ்சி., செவிலியா் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் செவிலியா் மாணவா் சோ்க்கை இடங்கள் உருவாக்கப்படுகிறது.
அதேபோல், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 கூடுதல் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.