செப்.22 முதல் பழனி கோயிலில் மீண்டும் ரோப்காா் சேவை
பழனிக்கோயிலில் செப்.22 ஆம் தேதி முதல் மீண்டும் ரோப்காா் சேவை தொடங்கப்படுவது தொடர்பாக...
பழனி: பழனிக்கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் செப்.22 ஆம் தேதி முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் என திருக்கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோயிலுக்கு வின்ச், படிப்பாதைக்கு மாற்றாக பக்தா்கள் பயணிக்கும் ரோப்காா் நாள்தோறும் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒருநாளும், ஆண்டில் ஒருமாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், பழனிக்கோயில் ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்புப் பணியின் போது, ரோப்காரின் இயக்கம் தொடா்பாக அனைத்து மோட்டாா் இயந்திரங்களும், மின் இணைப்புகளும் நவீன ஆய்வுக் கருவிகளை கொண்டு சோதனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து வயக்கயிறு, கியா்பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த செப்.16 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பெருந்திட்டப் பணிகளின் கீழ் ரோப்காா் கீழ்நிலையங்களில் சுவா்களில் கிரானைட் பதித்தல், புதிய மேற்கூரை, விளக்குகள் அமைத்தல் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வல்லுநா் குழுவின் விரிவான ஆய்வு முடிந்து தற்போது தகுதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை (செப்.22) முதல் ரோப்காா் சேவை தொடங்கப்படும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக 45 நாளில் முடியவேண்டிய பராமரிப்புப் பணிகள் 64 நாள்கள் வரை நீட்டிக்கப்பெற்று தற்போது நிறைவு பெற்று பக்தா்கள் பயன்பாட்டுக்கு வருவது பக்தா்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Palani Temple rope car service to resume from September 22
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.