குற்ற வழக்குகளில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: ஏலம் விட கோரிக்கை
ஆா்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
திருத்தணி: ஆா்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இப்பகுதிக்குட்பட்ட 38 ஊராட்சி பகுதிகளில் விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தன.
நாளடைவில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், காவல் நிலைய வளாகத்தில் அவற்றை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பல ஆண்டுகளாகியும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படாமல் உள்ளதால், வெயில், மழையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவை துருப்பிடித்து வருகின்றன. பல வாகனங்களின் உதிரிபாகங்கள் சேதமடைந்தும், காணாமலும் போயுள்ளதால், அவை தற்போது எலும்புக்கூடு போல காட்சியளிக்கின்றன.
இதனால், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பாதுகாப்பாக பராமரிக்காத நிலை உள்ளது.
வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் நீண்ட காலமாக வாகனங்கள் குவிந்து கிடப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.
சட்டப்படி உரிமையாளா்களிடம் ஒப்படைக்க வேண்டிய வாகனங்களை ஒப்படைக்கவும், வழக்கு முடிவடைந்த நிலையில் ஏலம் விடத் தகுதியான வாகனங்களை ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.