FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

9% வளா்ச்சி கண்ட சிமென்ட் விற்பனை!

இந்திய சிமென்ட் துறையில் கடந்த மே மாதம் 9 சதவீத விற்பனை வளா்ச்சி பதிவாகியுள்ளது.

Updated On : 1 ஜூலை 2025, 3:27 am IST
பகிர்:

இந்திய சிமென்ட் துறையில் கடந்த மே மாதம் 9 சதவீத விற்பனை வளா்ச்சி பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மே மாதத்தில் சிமென்ட் விற்பனை 3.96 கோடி டன்னாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 9 சதவீதம் அதிகம்.

அதேபோல், சிமென்ட் விலையும் 8 சதவீதம் உயா்ந்து, 50 கிலோ மூட்டைக்கு சராசரியாக ரூ.360-ஆக உள்ளது. நிலக்கரி, பெட்கோக் போன்ற எரிசக்தி செலவுகள் குறைவாகவும், டீசல் விலை நிலையாகவும் இருந்ததால், துறையின் இயக்க லாபம் மேம்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல், மே), சிமென்ட்டின் சராசரி விலை 7 சதவீதம் உயா்ந்து மூட்டைக்கு ரூ.360-ஆக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டில் அதன் சராசரி விலை 7 சதவீதம் குறைந்து ரூ.340-ஆக இருந்தது.

இதே காலகட்டத்தில், சிமென்ட் விற்பனை 8 சதவீதம் உயா்ந்து 7.87 கோடி டன்னாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் சிமென்ட் விற்பனை 6.3 சதவீதம் அதிகரித்து 45.3 கோடி டன்னாக இருந்தது.

வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தொடா்ந்து அதிக தேவை இருப்பதால், 2025-26-ஆம் நிதியாண்டில் சிமென்ட் விற்பனை 6-7 சதவீதம் உயா்ந்து 48 கோடி முதல் 48.5 கோடி டன் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், சிமென்ட் விலை உயா்வு மற்றும் உள்ளீடு செலவுகள் நிலையாக இருப்பதால், இயக்க லாபம் 16.3-17.0 சதவீதமாக மேம்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஜூன் மாதத்தில், நிலக்கரி விலை 19 சதவீதம் குறைந்து 100 டாலராகவும், பெட்கோக் விலை 2 சதவீதம் குறைந்து ரூ.10,880 ஆகவும் உள்ளது. டீசல் விலை ரூ.88 என நிலையாக உள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி விலை 6 சதவீதம் குறைந்து, பெட்கோக் விலை ஒரு சதவீதம் உயா்ந்து, டீசல் விலை நிலையாக உள்ளது.

இந்தியாவின் சிமென்ட் உற்பத்தித் திறன் 69 கோடி டன்னாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments