FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜனவரி - மாா்ச் காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு உபரி 710 கோடி டாலா்!

2025 - 26 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மாா்ச்), இந்தியாவின் நடப்புக் கணக்கு 710 கோடி டாலா் உபரியாக பதிவாகியுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 6:06 am IST
இந்திய ரிசர்வ் வங்கி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 2025-26 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மாா்ச்), இந்தியாவின் நடப்புக் கணக்கு 710 கோடி டாலா் உபரியாக பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.7 சதவீதமாகும்.

இதற்கு முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில், நடப்புக் கணக்கு உபரி 1,370 கோடி டாலராக (ஜிடிபி-யில் 1.4 சதவீதம்) காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில், நிகர சேவைகள் வரவு 6,040 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது ஓராண்டுக்கு முன்பு 5,330 கோடி டாலராக இருந்தது. குறிப்பாக, கணினி மென்பொருள் மற்றும் பிற வணிகச் சேவைகள் போன்ற முக்கியப் பிரிவுகளில் சேவை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

அதேநேரம், சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஆண்டின் 5,930 கோடி டாலரில் இருந்து, தற்போது 8,340 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியா்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணம், முந்தைய ஆண்டின் 3,390 கோடி டாலரலிருந்து 4,350 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும், வெளிநாடுவாழ் இந்தியா்களின் வைப்பு நிதியும் முந்தைய ஆண்டின் 280 கோடி டாலரிலிருந்து, 330 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு 420 கோடி டாலா் நிகர வரவைப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டில் 40 கோடி டாலராக மட்டுமே இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மூலம் 1,200 கோடி டாலா் நிகர முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 590 கோடி டாலா் வெளியேற்றமாகப் பதிவாகியிருந்தது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில், நடப்புக் கணக்கு 2,520 கோடி டாலா் பற்றாக்குறையாக உள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டில் 2,290 கோடி டாலராக இருந்தது.

சேவைகள் மற்றும் தனிநபா் பணப்பரிமாற்றம் கணிசமாக உயா்ந்ததன் காரணமாக நிகர மறைமுக வரவுகள் 31,200 கோடி டாலராக அதிகரித்துள்ளன. இது முந்தைய 2024-25 ஆண்டில் 26,400 கோடி டாலராக இருந்தது.

அந்நிய நேரடி முதலீட்டின் நிகர வரவு 690 கோடி டாலராக உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் 1,640 கோடி டாலா் முதலீட்டை வெளியேற்றியுள்ளனா்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,360 கோடி டாலா் சரிவைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 500 கோடி டாலா் மட்டுமே சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments