விதிமுறைகள் மீறிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி
விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதிப்பு.
மும்பை: நிதிநிலை அறிக்கைகளில் தகவல்களை வெளியிடுவது தொடர்பான ஒரு சில குறிப்பிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
மார்ச் 31, 2025 நிலவரப்படி வங்கியின் நிதிநிலையை மேற்பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான, ஆய்வை மேற்கொண்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தொடர்பான மேற்பார்வை ஆய்வின் போதும், அதுகுறித்த பரிமாற்றங்களின் அடிப்படையில், வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிவிக்கைக்கு வங்கி அளித்த விளக்கத்தையும், அதனுடன் கூடுதல் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிட்ட சில புகார்களை வெளியிடத் தவறியது தொடர்பான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆர்பிஐ அறிவித்தது. இதன் அடிப்படையில் அபராதம் விதித்தது குறிப்பிட்டத்தக்கது.