FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குரு - சிஷ்யன்

1. எது உண்மை?

ஒன்றுபோலவே இருப்பது வேறு. ஒன்றாகவே இருப்பது வேறு. பொத்தாம் பொதுவாக நாம் வெண்மை என்று சொல்லிக்கொள்ளும் வெண்மைக்குள் நூற்றுக்கணக்கான வெண்மைகள் இருக்கின்றன.

Updated On : 23 ஏப்ரல் 2019, 12:03 pm IST
பகிர்:

‘‘மௌனம்தான் சிறந்த மொழி. குறிப்பால் உணர்த்துவதும், உணர்வுகளால் உரையாடிக்கொள்வதுமே முழுமையான தொடர்பு மொழி’’ என்றார் குரு.

‘‘அப்படியானால் மொழிகள் எதற்கு குருவே?’’ என்றான் சிஷ்யன்.

‘‘அவை மனிதர்களுக்கு பொய் பேசக் கற்றுக்கொடுக்கின்றன’’ என்றார் குரு.

Advertisement

Advertisement

ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை சிஷ்யனுக்கு. அதை அவன் பார்வையிலேயே புரிந்துகொண்டார் குரு.

‘‘வான் நிலா என்ன நிறம்?’’ என்று கேட்டார்.

‘‘வெண்மை’’ என்றான் சிஷ்யன்.

‘‘நீ பருகும் பால்?’’

‘‘வெண்மை’’

‘‘உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிர்?’’

‘‘வெண்மை’’

‘‘உன் பற்கள்?

‘‘வெண்மை’’

"சுவற்றில் அடிக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பு?’’

‘‘வெண்மை’’

‘‘இரவு உணவுக்காக நீ பொடியாக்கி வைத்திருக்கும் தானிய மாவு?’’

‘‘வெண்மை’’

குரு, புன்னகைத்துக்கொண்டு பேசலானார். ‘‘எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறாய் நீ?’’.

பதறிவிட்டான் சிஷ்யன். ‘‘அய்யோ குருவே.. நானா? பொய்யா?!’’

‘‘ஆம். நீ வெண்மை எனச் சொன்ன அத்தனையும் ஒரே நிறத்திலா இருக்கின்றன? அனைத்தையும் அருகருகே வைத்துக் கற்பனை செய்துகொண்டு, அவையெல்லாம் ஒரே நிறத்தில்தான் இருக்கின்றனவா என்று கவனமாகப் பார்த்துச் சொல்’’ என்றார் குரு.

கண்களை மூடினான் சிஷ்யன். மனக்கண்களால் யோசித்தான். கண் திறந்தான். பேசினான். ‘‘ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அனைத்துமே வெண்மைதான். ஆனால், ஒன்றின் வெண்மைக்கும் இன்னொன்றின் வெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது’’.

‘‘அதைத்தான் நான் சொன்னேன். நீ பொய் சொல்கிறாய் என்று" என்றார் குரு.

தலை கவிழ்ந்தான் சிஷ்யன்.

‘‘ஒன்றுபோலவே இருப்பது வேறு. ஒன்றாகவே இருப்பது வேறு. பொத்தாம் பொதுவாக நாம் வெண்மை என்று சொல்லிக்கொள்ளும் வெண்மைக்குள் நூற்றுக்கணக்கான வெண்மைகள் இருக்கின்றன. கருப்பு கலந்த வெண்மை, சிவப்பு கலந்த வெண்மை, காவி கலந்த வெண்மை, நீலம் கலந்த வெண்மை, இப்படிப் பல வண்ணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயரிட்டுக் குறிப்பிடாமல், எல்லாவற்றையும் வெண்மை என்றே தவறாகக் குறிப்பிடுகிறோம். மொழி இப்படித்தான் பெரும்பாலும் பொய் சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. உண்மையை முழுமையாகக் கடத்துவதில்லை. உணர்வுகளால் பேசும்போதுதான் மனிதன் உண்மையாக இருக்க முடிகிறது’’.

குரு சொன்னதை ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடாக, மறு வார்த்தை பேசாமல் அவரது கால்களில் விழுந்து வணங்கினான் சிஷ்யன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments