முகப்பு
நோ காம்ப்ரமைஸ்

விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது! 

கலைத்துறையைத் தொழிலாக வரித்துக் கொண்டவர்களுக்கு நிச்சயம் வாசிப்பு பழக்கம் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது கற்பனை எல்லைகள் விரிவடைய வாய்ப்புகளே இல்லை’ என்கிறார் செளம்யா.

Updated On : 29 டிசம்பர் 2018, 4:23 pm IST
பகிர்:

இந்த வாரம் தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் - 10 வது விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் செளம்யா நிழல்... இன்று இந்தியாவில் பெண்கள் அடியெடுத்து வைத்து சாதிக்க முடியாத துறை என்ற ஒரு துறையே இல்லை. சகலத்திலும் பெண்கள் புகுந்து தங்களது தடங்களை வெற்றிகரமாகப் பதித்து வருகின்றனர். அந்த வகையில் செளம்யா சென்னையின் பிரபல புகைப்படக் கலைஞர்களில் ஒருவராகப் பரிணமித்து வருபவர். வெறுமே புகைப்படக் கலைஞராக மட்டுமே இல்லாது தன் தந்தையுடன் இணைந்து ‘நிழல்’ ஸ்டுடியோ மூலமாக தான் கற்றுக் கொண்ட புகைப்படக் கலையின் எல்லைகளை விரிவடையச் செய்து கொண்டும் இருக்கிறார். தொழில்முறையாக மட்டுமன்றி தனக்கான சமூக அங்கீகாரத்தையும், சுயமரியாதையையும் ஈட்டிக் கொள்ளும் விதமாகவும் இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் செளம்யா. கல்லூரிக்காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காம்பியரிங் செய்த அனுபவம் உண்டென்பதால் செளம்யாவின் தமிழ் உச்சரிப்பில் சோடை காண முடியாது. அட்சர சுத்தமாக அழகுத் தமிழ் பேசும் செளம்யாவுக்கு பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோரால் இலக்கியப் பரிச்சயமும் உண்டு. 

கலைத்துறையைத் தொழிலாக வரித்துக் கொண்டவர்களுக்கு நிச்சயம் வாசிப்பு பழக்கம் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது கற்பனை எல்லைகள் விரிவடைய வாய்ப்புகளே இல்லை’ என்கிறார் செளம்யா.

செளம்யாவுடனான முழுமையான நேர்காணாலைக் காண...

Advertisement

Advertisement

அது மட்டுமல்ல புகைப்படத்துறையில் பலவகையான ஜானர்கள் உள்ளன. ஆனால், இன்றும் கூட தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வெட்டிங் ஃபோட்டோகிராபி என்று சொல்லப்படக்கூடிய திருமணப் புகைப்படங்கள் தவிர்த்து பெரிதாக நம் புகைப்பட வல்லுனர்கள் கவனம் செலுத்துவதில்லை என்ற ஆதங்கம் தனக்கிருப்பதாகவும் அதையும் தாண்டி இன்றைய தலைமுறையினர் வெவ்வேறு ஜானர்களில் கலக்கும் போது இத்துறையில் மேலும் புதுமைகள் படைக்க முடியும் என்ற நம்பிக்கை தன்னைப் போன்றோரை வந்தடைவதாகவும் அவர் கூறும் போது புகைப்படத்துறை பெண்களுக்குப் பொருத்தமானதல்ல என்று ஒதுக்கிய காலத்தை இன்றைய பெண்கள் புறம்தள்ளி ஜெயித்துக் கொண்டிருப்பது நிஜம் என்று உணர முடிகிறது.

ஒரு மாணவியாக இருந்த நிலை மாறி இன்று பெரும்பாலானோர் படிக்க விரும்பக்கூடிய ஒரு துறையின் திறன் மிக்க கலைஞராக தான் படித்த பள்ளி, கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு இந்தக் கலை தன்னை உயர்த்தி இருப்பது குறித்துப் பெருமிதப்படும் செளம்யாவுக்கு காம்பியரிங் ஆர்வம் இப்போதும் இருந்தாலும் அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை என்பதால் முழு நேரப் புகைப்படக் கலைஞராக தன் தந்தையுடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.

செளம்யாவுடனான இந்த நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் மூலமாக பெண்கள் சுதந்திரமாக சாதிக்க முடியாத துறையல்ல புகைப்படத்துறை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.