FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இணையம் ஸ்பெஷல்

கண்ணியத்துடன் இறக்க விடுங்கள்! அனைவரும் வாழ்வுரிமை உயில் எழுதலாம்!

கண்ணியத்துடன் இறக்க விடுங்கள் என்று கோரும் வாழ்வுரிமை உயில் எழுதுவது பற்றி..

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 10:30 am IST
வாழ்வுரிமை உயில் - Center-Center-Chennai
பகிர்:

வாழ்வுரிமை உயில் என்பது, மண்ணில் வாழும் எவரொருவரும் தாங்கள் கண்ணியத்துடன் இறக்கக் கோருவதாக எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு அளிக்கும் ஒரு ஆவணம். சொத்து இருப்பவர்கள்தான் உயில் எழுதுவார்கள் என்பது போல அல்லாமல் இதனை அனைவரும் எழுதலாம்.

எதிர்காலத்தில், ஒருவேளை தான் சுயநினைவை இழந்தாலோ, கோமா நிலைக்குச் சென்றாலோ என்னுடைய உயிர் மற்றும் உடல்நிலை குறித்து சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்து, மருத்துவ ரீதியாக, மீள முடியாது என்பது உறுதி செய்யப்பட்டால், எந்தவிதமான உயிர்காக்கும் கருவிகளையும் பொருத்த வேண்டாம் என்று முன்கூட்டியே எழுதி வைப்பதே வாழ்வுரிமை உயில்.

இந்த வாழ்வுரிமை உயில் என்பது இந்தியாவில் சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் வாழும் எவர் ஒருவரும் வாழ்வுரிமை உயிலை எழுத முடியும்.

Advertisement

Advertisement

நல்ல மனநிலையில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட எவர் ஒருவரும் வாழ்வுரிமை உயில் எனப்படும், கண்ணியத்துடன் இறக்கக் கோரும் ஆவணத்தை அதாவது முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல் எனப்படும் உயிலை எழுதலாம். இதனை ஒரு வழக்குரைஞரோ அல்லது மருத்துவர் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்பது அவசியமில்லை.

பொதுவாக, இந்த வாழ்வுரிமை உயிலில், சாட்சியங்கள் முன்னிலையில் எழுதுபவர் தேதியுடன் கையெழுத்திட்டு, சட்டப்பூர்வ ஆவணமாக செல்லுபடியாவதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்கின்றன தகவல்கள்.

அந்த வாழ்வுரிமை உயிலை எழுதியவர், மீளமுடியாத கோமா அல்லது சுயநினைவை இழந்த நிலைக்குச் சென்றால், உயிர் காக்கும் கருவிகள், வென்டிலேட்டர் அல்லது உணவுக் குழாய்களை மறுக்க விரும்புகிறாரா என்பதை மருத்துவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கும் வகையில் எழுதப்படுகிறது.

ஆனால், இந்த வாழ்வுரிமை உயில் எழுதிவிட்டாலே அவருக்கு உயிர் காக்கும் கருவி சிகிச்சை அளிக்கப்படாதா என்றால் இல்லை, ஒருவருக்கு ஏதேனும் விபத்து அல்லது நோயால் கோமா நிலையை அடைந்து, அவர் மீளவே முடியாது என்று மருத்துவர்கள் சான்றளித்தால் மட்டுமே இந்த வாழ்வுரிமை உயில் உயிர்பெறும்.

இந்த உயில், ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள நேரடியாக உதவுவதாக அதாவது தற்கொலைக்கு உதவுவது போல இல்லை. ஒருவர் உயிர் வாழ, செயற்கை உயிர் காக்கும் சிகிச்சையை வழங்காதிருத்தல் அல்லது அதனைத் திரும்பப் பெறுதல் போன்ற மறைமுக நடவடிக்கைகளின் போது, உரிய நபரின் ஒப்புதலுக்கான சட்ட ஆவணமாக கருதப்படும்.

நாளை என்பது நிச்சயமில்லாத இந்த உலகில், நல்ல ஆரோக்கியத்துடன் மனநிலையில் இருக்கும்போதே ஒருவர், தன்னுடைய உயிர் மற்றும் வாழ்வு குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்து, இந்த வாழ்வுரிமை உயிலை எழுதி வைத்துவிடலாம்.

ஒருவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டு, மருத்துவர்கள், அவர் மீள வாய்ப்பில்லை என்று அறிக்கை அளிக்கும்பட்சத்தில், இந்த வாழ்வுரிமை உயிலில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர் கண்ணியத்துடன் இறக்கவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

இந்தியாவில், கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வாழ்வுரிமை உயில் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் இருந்த சில சிக்கலான நடைமுறைகள், கடந்த 2023ஆம் ஆண்டு எளிமைப்படுத்தி அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நாட்டில் முதல் முறையாக, கோமா நிலையில் இருந்த ஹரீஷ் ராணா என்பவர், கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 31 வயது ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு இறுதியாக உயிா் காக்கும் கருவி அகற்றப்பட்டு, அவர் இயற்கையாக மரணமடைந்தார். இதற்காக அவரது பெற்றோர் நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்தினர். ஆனால், தற்போது இந்த வாழ்வுரிமை உயில் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் கருணைக் கொலை என்பதும் எளிமையாகிவிடும் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments