விதவைகளுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகள்! கவனிக்க வேண்டிய நீதிமன்ற தீர்ப்புகள்!
விதவைகளுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகள் தொடர்பாக கவனிக்க வேண்டிய நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி..
கணவரின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை தொகையைப் பெறும் பெண்களுக்கும், மறுமணம் செய்வோருக்கும் விதவை ஓய்வூதியம் வழங்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்த தகவல்களை அறிய வேண்டியது அவசியம்.
கணவர் இறந்தபோது குழந்தையில்லாமல் இருந்த ஒரு பெண், மறுமணம் செய்து கொண்டு பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தாலும், "குழந்தையற்ற விதவை" என்பதற்கான ஓய்வூதியத் தகுதியை இழக்கமாட்டார் என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, மகன் இறந்தபிறகு, மறுமணம் செய்து கொண்டு பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்த தனது மருமகளுக்குப் பதிலாக, தனக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி அரசு ஊழியர் ஒருவரின் தாயார் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறார்.
Advertisement
Advertisement
இறந்த அரசு ஊழியரைப் பொறுத்தவரை, குடும்பம் என்ற சொல், ஊழியருடன் நேரடி மற்றும் நெருங்கிய உறவுமுறையை மட்டுமே குறிக்கிறது.
கணவரை இழந்த பெண், மறுமணம் செய்து கொண்டு அதன் மூலம் பிறந்த குழந்தைக்கு, இறந்த அரசு ஊழியருடன் சட்டரீதியான தொடர்பு ஏதுமில்லை என்றும் உத்தரவில் கூறியிருக்கிறது.
மரணமடைந்த அரசு ஊழியரின் தாய் தாக்கல் செய்த மனுவில் மகன் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அவரது மருமகள் மறுமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அவர் இனி "குழந்தையற்ற விதவை" என்ற நிலையில் இருக்கமாட்டார் என்றும், அதனால் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர் ஆகிவிட்டார் என்றும் மனுதாரர் வாதிட்டார். எனவே, குடும்ப ஓய்வூதியம் தனக்கே கிடைக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஊழியர் ஒருவரின் விதவை, தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவரது வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையைப் பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கி அறிமுகப்படுத்திய ஒருமுறை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவர் குடும்ப ஓய்வூதியம் கோரினார். ஆனால், அவர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றும், உரிய நேரத்தில் சமர்ப்பித்ததற்கான ஆதாரத்தை அவரால் நிறுவ முடியவில்லை என்றும் கூறி, தில்லி உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.