கோலிவுட் ஸ்டூடியோ!
நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அவரது கனவை நனவாக்கியிருக்கிறார்.
சிம்ரனின் நெகிழ்ச்சி செயல்!
நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அவரது கனவை நனவாக்கியிருக்கிறார். பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்த நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத்திடாமல் தன்னம்பிக்கையோடு, நடனமாடி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார். நிஷா நடனமாடிய இந்தக் காணொலிகளை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, அவரின் திறமையை பலர் அறியச் செய்திருக்கிறார் தன்னார்வலர் ஆஷிக்.
நடிகை சிம்ரனிடம், நிஷாவைப் பற்றியும், அவருக்கு நடனத்தின் மீதிருக்கும் ஆர்வத்தைப் பற்றியும், நிஷாவுக்கு இருக்கும் ஆசைகள் பற்றியும் ஆஷிக் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்ட சிம்ரன், நிஷாவைச் சந்தித்திருக்கிறார். அப்போது, சிம்ரனின் பாடல்களுக்கு அவருடனேயே சேர்ந்து நடனமாடியிருக்கிறார் நிஷா .
Advertisement
Advertisement
அதுமட்டுமன்றி, நிஷாவுக்கு சைக்கிள் தேவை என்பதை அறிந்துகொண்ட சிம்ரன், ஒரு புதிய சைக்கிளைப் பரிசாக வழங்கியிருக்கிறார். மேலும், நிஷாவிடம் பேசிய நடிகை சிம்ரன், படிப்பில் மட்டுமே முதன்மையாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், கனவுகளைத் தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் எனவும் ஊக்கமளித்திருக்கிறார்.
நிஷாவை சிம்ரன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி, இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விமர்சனங்களுக்கு கங்கனா பதில்!
நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், அண்மையில் ஜென் சி இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்துப் பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தன.
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், 'கங்கனா' திரைப்படங்களில் நடித்த சில கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைப் பகிர்ந்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கங்கனா பதில்கொடுத்திருக்கிறார்.
அதில், 'கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, பலத்த பாதுகாப்புடன் ஒரு நடிகையாக திரைப்படக் கதாபாத்திரங்களில் நான் நடித்த காட்சிகளைப் பயன்படுத்தி, வளரும் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்த முயலாதீர்கள்.
திரையில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பது வேறு; நிஜ வாழ்க்கையில் பள்ளி
களிலோ, பொது வீதிகளிலோ அல்லது மதுபானக் கூடங்களிலோ நடப்பது வேறு. இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களின் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தினால், நாளை அது உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே நடக்கும்' என்று பதிவிட்டிருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்!
இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியப் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.
நடனமாடிக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக தடுமாறிக் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் ஆகும். அதுவரை அவர் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்காக, அண்மையில்தான் அவர் மிகக் கடினமான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாடல் படப்பிடிப்பின்போது இந்த விபத்து நடந்திருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.