அறிவகம்..!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட காரசூரம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மாணவர் தேர்தலை நடத்தி, பள்ளி நிர்வாகத்துக்கான அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட காரசூரம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மாணவர் தேர்தலை நடத்தி, பள்ளி நிர்வாகத்துக்கான அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-இல் நடைபெற்ற இந்தத் தேர்தலில் அலுவலராக அருகிலுள்ள காப்புக்குடி அரசுத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஜெயக்குமார் செயல்பட்டார். பொதுத்தேர்தலைப் போன்று, மாணவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முடிவு உடனே அறிவிக்கப்பட்டது.
'அறிவகம்' அமைச்சராக ச. பிரித்திகா, உள்துறை அமைச்சராக பா. அருண், வெளியுறவுத் துறை அமைச்சராக நா. கபிலா, உணவு மற்றும் புலனாய்வுத் துறை அமைச்சராக மூ. ரிதன்யா, மரம் மற்றும் இயற்கைப் பாதுகாப்புத் துறை அமைச்சராக கோ. நபிலன், இணை அமைச்சர்களாக சு. மகிழினி, ச. சபரீஸ்வரன், கோ. யாஷிகாஸ்ரீ, க. ரித்திஷ், பொ. தர்ஷிகா உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
Advertisement
Advertisement
'எதற்காக இப்படியொரு தேர்தல்?' என்று பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தீ.திருப்பதியிடம் கேட்டபோது:
'புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அகரப்பட்டியே எனது சொந்த கிராமம். எம்.ஏ., பி.எட்., படித்தேன்.
2004-ஆம் ஆண்டு கீரனூர் அருகே வெள்ளாளப்பட்டி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அதன்பின்னர், மரிங்கிப்பட்டி தொடக்கப் பள்ளி. பின்னர் 2024-இல் காரசூராம்பட்டி தொடக்கப் பள்ளி. நான் பணிபுரிந்த பள்ளிகளில் 22 ஆண்டுகளும் மாணவர்களுக்கான தேர்தல் நடத்தியிருக்கிறேன். அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் முழு ஆதரவளித்தனர்.
சக மாணவர்களை, அண்ணன்- தம்பிகளாகப் பார்த்துப் பழகவும், எல்லோரையும் 'வாங்க போங்க' என மரியாதையுடன் அழைக்கப் பழகவும் இந்தத் தேர்தல் பயன்படுகிறது.
உள்துறை அமைச்சர் வகுப்பறைக்குள்ளே கவனித்துக் கொள்வார். வெளியுறவுத் துறை அமைச்சர் வகுப்பறைக்கு வெளியே பள்ளி வளாகத்தைக் கவனித்துக் கொள்வார். உணவுத் துறை அமைச்சர் காலை, மதிய உணவு வழங்கப்படுவதைக் கவனிப்பார். அறிவகத் துறை அமைச்சர், வேறுயாருமல்ல பள்ளியின் சிறிய நூலகத்தைக் கவனிக்கும் அமைச்சராவார்.
மரம், இயற்கைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, மரங்களை நீரூற்றிப் பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்.
இவர்களுக்கு உதவியாக இணை அமைச்சர்களும், மாணவர்களும் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு இடையே ஜனநாயகப் பண்புகளையும், சமூகமாகச் சேர்ந்து வாழும் பண்பையும், ஒவ்வொருவருக்குமான பொறுப்புணர்வை உருவாக்கிடவும் இந்த முறை தொடக்கக் காலத்தில் இருந்தே வளர்த்தெடுக்கும்.
காரசூராம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மொத்தம் 22 மாணவர்கள். வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடைபெற அனைவரும் வாக்களித்தனர். அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் அமைச்சர்களானார்கள். விரும்பியவர்களுக்கு விரும்பிய துறை.
வேலையைப் புரிந்து கொண்டு தங்களுக்குள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இதுவரை செய்த பணிகளையும், அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் அமைச்சரவை இறுதி செய்கிறது' என்கிறார் திருப்பதி.
அப்படியானால், வகுப்பின் தலைமை மாணவர் மாவட்ட ஆட்சியரா? பள்ளியில் அமைச்சரவை என்றால் வெளிநடப்பு இருக்குமோ?
-சா.ஜெயப்பிரகாஷ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.