FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரு நாள்... ஒரு தெரு

'நான் இந்தியாவில் எங்குச் சென்றாலும் தினமும் ஒரு தெருவை சுத்தம் செய்யும் வேலைகளில் இறங்கிவிடுவேன்.

9 மே 2026, 7:12 pm IST
பகிர்:

'நான் இந்தியாவில் எங்குச் சென்றாலும் தினமும் ஒரு தெருவை சுத்தம் செய்யும் வேலைகளில் இறங்கிவிடுவேன். இந்தியாவில் எனது தூய்மைப் பணிக்கு இன்ஸ்டா பக்கத்தையும் தொடங்கியிருக்கிறேன்.

'ஒரு நாள் ஒரு தெரு' என்ற முன்னெடுப்பை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கினேன். ஒரு வெளிநாட்டவர் இத்தகைய தூய்மைப் பணியை கையில் எடுத்திருப்பதை பல இந்தியர்கள் பாராட்டியுள்ளார்கள்' என்கிறார் செர்பியா நாட்டைச் சேந்த 33 வயதான லாசர் ஜன்கோவிக்.

தொழில் விஷயமாக இந்தியாவுக்கு 2018-இலிருந்து வந்து செல்கிறார். தொடர்ந்து பல மாதங்கள் இந்தியாவில் தங்கி, தொழிலைக் கவனிப்பதுடன், அவர் தங்கியிருக்கும் நகரங்களில் கிடக்கும் குப்பைக் கூளங்கள், கழிவுகளை அகற்றிவருகிறார். தனது பணியில் உள்ளூர் மக்களையும் சேர்த்துக் கொள்கிறார். தூய்மைப் பணிகளை ஆவணப்படுத்தியும் வருகிறார். இந்த முயற்சி இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது தில்லியில் தங்கியிருக்கிறார். லாசர் மேலும் சொல்வதாவது:

Advertisement

Advertisement

'தில்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நீண்ட காலமாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மக்கள் குப்பைகளை தெருக்களில் வீசுவதை நிறுத்த வேண்டும். அரசாங்கமும் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தடுக்க கடுமையான தண்டனைகளை அமல்படுத்தும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும். தூய்மையான நகரங்களுக்குத் தேவை வெறும் தன்னார்வலர்கள் மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமக்களும் கடுமையான நடவடிக்கைகளும்தான்.

தில்லிக்கு அருகில் இருக்கும் 'குடுகாவ்ன்' நகரம், பளபளக்கும் வானளாவிய கட்டடங்களுக்கும் பரபரப்பான வணிக வளாகங்களுக்கும் பெயர் பெற்றது. இன்னொருபுறம், திறந்த சாக்கடைகள், பிளாஸ்டிக் கழிவுக் குவியல்கள், குப்பைகள் நிறைந்த தெருக்களும் உள்ளன. செக்டர் 55 -இல் வசிக்கும் நான் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

எனது இந்தியப் பயணம் 2018-இல் ஒரு மாடலிங் ஒப்பந்தத்துடன் தொடங்கியது. 2024 -இல் 'குடுகாவ்ன்' நகரத்துக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, பெங்களூருவில் ஆறு ஆண்டுகள் வசித்தேன். பெங்களூரு எவ்வளவு அழகானது என்பதையும், அதே நேரத்தில் எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதையும் நான் என் அனுபவத்தில் கண்டேன்.

இதுதான் 'ஒரு நாள் ஒரு சாக்கடை' , 'ஒரு நாள் ஒரு தெரு' என்ற இயக்கத்தைத் தொடங்க வைத்தது. எனக்கு இந்தி, கன்னடம், கொஞ்சம் தமிழ் பேசத் தெரியும்.

மண்வெட்டி, குப்பைப் பைகளுடன், பூங்கா, சாலை அல்லது திறந்தவெளியை சுத்தம் செய்யத் தொடங்கினேன். நான் தில்லிக்குச் சென்றபோது, அங்கும் சமூகத் தூய்மைப் பணிகளைச் செய்ய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கினேன்.

சேகரிக்கும் அல்லது சுத்தம் செய்யும் குப்பைகளில் உணவு உறைகள் முதல் மருத்துவ ஊசிகள், அழுக்கு டயப்பர்கள் வரை அடங்கும். தொடக்கத்தில் இவற்றைப் பார்க்கும்போது கஷ்டமாகத்தான் இருந்தது. போகப் போக பழகிவிட்டது.

நான் தமிழ்நாடு சென்ற போது, வெள்ளிங்கிரி மலைகளில், ஒரு நாளில் 100 கிலோ குப்பைகளை சுத்தம் அகற்றினேன். உத்தரகண்டின் ரிஷிகேஷில், மாலை ஆரத்தியின் போது, எனது தோழியின் உதவியுடன் நதியின் படித்துறைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சிகரெட் துண்டுகள், குட்கா பாக்கெட்டுகள், ஊசிகளை அகற்றினேன். எனது பெண் தோழி சிக்கிமைச் சேர்ந்தவர். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். திருமணத்துக்குப் பிறகு இந்தியாவில் நிரந்தரமாக தங்க விரும்புகிறேன்' என்கிறார் லாசர் ஜன்கோவிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments