புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்தால் புளியோதரை மிகவும் ருசியாக இருக்கும்.
பெரிய துண்டு கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி மைதாமாவில் தோய்த்து பொரித்தெடுத்து சென்னா கிரேவி செய்து இறக்கும்போது கத்திரிக்காயை அதில் சேர்த்து கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் கோப்தா ரெடி.
மீந்து போன தோசைமாவில் பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நறுக்கிச் சேர்த்து சுவையான பக்கோடா செய்யலாம்.
உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து பிறகு ரோஸ்ட் கறி செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது. மிகவும் ருசியாகவும் இருக்கும்.
மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சில வெந்தும் சில வேகாமலும் இருக்கும்.
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி ஜவ்வரிசியைப் போட்டு பொரித்து எடுத்து அதில் கரம் மசாலா, கேரட் துருவல், மிளகாய்த் தூள் கலந்து செய்தால் கரகர மொறுமொறுவென்று இருக்கும்.
உளுந்து வடை செய்யும்போது அரைத்து எடுத்துள்ள மாவில் ஒருபிடி கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து செய்தால் வடை ருசியாக இருப்பதுடன் எண்ணெய்யும் குறைவாகவே தேவைப்படும்.
மாங்காய் தொக்கு, எலுமிச்சைத் தொக்கு என எந்த தொக்கு செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சைப் பழச்சாற்றை பிழிந்தால் தொக்கு நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.