இயற்கைப் பொருள்களுக்கு அமெரிக்காவில் மவுசு!
இயற்கையான மூலிகைகள், செடிகள், பூக்களைக் கொண்டு அழகுச்சாதனப் பொருள்கள், சோப்புகள், வாசனைத் திரவியங்கள், நறுமணப் பொருள்கள், மெழுகுவர்த்திகள், சானிட்டரி நாப்கின்களைத்...
இயற்கையான மூலிகைகள், செடிகள், பூக்களைக் கொண்டு அழகுச்சாதனப் பொருள்கள், சோப்புகள், வாசனைத் திரவியங்கள், நறுமணப் பொருள்கள், மெழுகுவர்த்திகள், சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார் சென்னை மணலியைச் சேர்ந்த கணினி அறிவியல் முதுநிலைப் பட்டதாரியான சுனிதா விஸ்வநாத்.
'இயற்கையே என்றும் அழகு. வீட்டுத் தோட்டத்திலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு நாம் இயற்கையோடு இயைந்து நலமோடு வாழலாம். எனது மகள்கள் தர்ஷினி, அனலிகாவுக்கு இயற்கையான பொருள்களை அளிக்க வேண்டும் என்ற உந்துதலால் தொடங்கிய இந்தத் தயாரிப்பு, இப்போது வெளி
நாடுகளுக்கும் அனுப்பி வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இயற்கைப் பொருள்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு அதிகமாகவே உள்ளது' என்று சுனிதா விஸ்வநாத் கூறுகிறார்.
Advertisement
Advertisement
இல்லத்தரசியான அவர் வீட்டிலேயே ஓய்வு நேரத்தில் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு, தற்போது தனியாகத் தயாரிப்புக் கூடத்தையே தொடங்கி தொழில் முனைவோராகியுள்ளார். அவரிடம் பேசியபோது:
'மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது, அங்கு இயற்கையான பொருள்களுக்கான தேவை இருப்பதை அறிந்தேன். அங்கிருந்த சிலரின் அறிமுகத்தின் வாயிலாக, கரோனா காலத்தில் ஓய்வாக இருந்தபோது 'சேனா ஹேர் ஆயில்' தயாரித்து அனுப்பினேன். இதற்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
இதற்கேற்றவாறு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் திட்டம், எம்.எஸ்.எம்.இ. போன்ற அரசு அமைப்புகள் வாயிலாக, சிறுதொழில் பயிற்சிகளையும், இணையதளத்தின் வாயிலாக வகுப்புகளையும் சேர்ந்து அதற்கேற்றவாறு நானும் தயாரானேன்.
முகப் பராமரிப்புக்காக..
மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இப்போது மறைந்து வரும் நிலையில், முகத்துக்கு 'பேஸ் வாஷ்' தயாரித்து வருகிறேன். மஞ்சஸ்தா சோப், ஆட்டுப் பால் சோப், பப்பாளி சோப், ரெட்ஓயின் சோப், குப்பைமேனி சோப், அம்மன்பச்சரிசி சோப் உள்ளிட்டவற்றை இயற்கையான முறையில் தயாரிக்கிறேன். தேங்காய் ஓட்டை இடித்து, அதைப் பக்குவப்படுத்தி, சோப், பேஸ் பேக் பவுடர்களைத் தயாரிக்கிறேன். மஞ்சள், கஸ்தூரி, பச்சைப் பயறு உள்ளிட்டவற்றைச் சேர்த்து முக அழகுக்கான பவுடர் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. மஞ்சஸ்தா, ரைஸ் பேஸ், குப்பைமேனி, ரெட்ஒயின் க்ரீம்கள் முகத்துக்கு அழகை ஊட்டும். 'கோல்டன் ஷாட் மாஸ்க்' என்ற ஃபேஷியலை முகப் பொலிவுக்குப் பயன்படுத்துகிறேன்.
முடிகள் பராமரிப்பு
இளைய தலைமுறையினருக்கு இளநரை அதிகமாகி வருகிறது. உடலில் வாதம், பித்தம், கபம் இருப்பதுபோன்று, முடிகளிலும் உள்ளன. இந்த முடிகளுக்கு ஏற்றவாறு எண்ணெய் பயன்படுத்தினால், இளநரை அகன்று முடிகள் கருமையாகும். தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் தலைமுடியை உள்ளே போட வேண்டும். அது மிதந்தால் கபம், கீழே சென்றால் வாதம், நடுவில் இருந்தால் பித்தம் என்பதை அறியலாம். இதற்கேற்றவாறு மூன்று ரகங்களில் எண்ணெய்களைத் தயாரித்து விற்பனை செய்கிறேன்.
முடிகள் நன்கு வளர்ச்சி அடைய கரிசலாங்கண்ணி, சீயக்காய், கறிவேப்பிலை, ஆலம் விழுது போன்றவை அடங்கிய 'ஹேர் மாஸ்க்' சிறப்பாக இருக்கிறது.
செம்பருத்திப் பூ, தேங்காய்ப் பால் போன்றவற்றில் ஷாம்பூக்கள் தயாராகின்றன. குப்பைமேனி இலைகள் உள்ளிட்ட பல இலைகள் கொண்ட முடிகள் அகற்றும் பவுடரை தயாரித்து வருகிறேன்.
உதட்டுச் சாயம்
பீட்ரூட் லிப்ஸ்டிக், கேகோ லிப்ஸ்டிக் போன்ற உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்தினால், அவற்றால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு நேராது.
மற்ற பொருள்கள்
முழுவதும் இயற்கைப் பொருள்கள் அடங்கிய ஏழு வகையான சானிட்டரி நாப்கின்கள், தண்ணீரில் மிதந்து எரியும் மெழுகுவர்த்திகள், இயற்கையான வடிவங்களைக் கொண்ட மெகுகுவர்த்திகள், ரச கற்பூரங்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறேன். இதற்காக, பல்வேறு அமைப்புகள் வழங்கிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றுள்ளேன்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் போன்றவற்றைப் பெற்று, ஏற்றுமதி செய்கிறேன்.
எனது பொருள்களுக்கு அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டெலாசஸில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர் தீபலட்சுமி செந்தில்குமார் முகவராக இருந்து, அங்கு நல்லமுறையில் விற்பனை செய்துவருகிறார். அவர் அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் வாயிலாக, இயற்கையான பொருள்களை அளித்துவருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எனது பணிகளுக்கு எனது கணவர் வழக்குரைஞர் விஸ்வநாத், எனது மாமியார் திலகா பசுபதி, பெற்றோர் முரளி- சரளா உள்ளிட்ட உறவினர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் சுனிதா விஸ்வநாத்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.