FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மருத்துவச் சேவையே லட்சியம்!

'தொடர் முயற்சியும், கூட்டுப் பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி'' என்கிறார் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடத்தையும், அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் 12- ஆவது இடத்தையும் பிடித்துள்ள அ.வே. வேங்கடபதி வேலாயுதம்.

Updated On : 26 ஜூலை 2026, 4:02 am IST
பகிர்:

'தொடர் முயற்சியும், கூட்டுப் பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி'' என்கிறார் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடத்தையும், அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் 12- ஆவது இடத்தையும் பிடித்துள்ள அ.வே. வேங்கடபதி வேலாயுதம்.

விழுப்புரம், வி.ஜி.பி. நகரில் வசித்து வரும் மருத்துவத் தம்பதியின் மகன் பதினெட்டு வயதான அ.வே. வேங்கடபதி வேலாயுதம். இவர் 2026 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தேசிய தேர்வு முகமையால் (என்.டி.ஏ.) நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி காண் தேர்வில் (நீட்) 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

'சாதனை படைத்தது எப்படி?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'எங்களது பூர்விகம் கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பண்ருட்டி. எனது தந்தை வே. அஞ்சன் ராமச்சந்திரநாத், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவு துறைத் தலைவராகவும், எனது தாய் த.புனிதவதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மன நலம் & நரம்பியல் சிறப்பு உதவிப் பேராசிரியராகவும் இருந்து வருகின்றனர். எனது தங்கை வே. அ.சுகவனேஷ்வரி, புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

எனக்குச் சிறுவயதிலேயே மருத்துவராக வேண்டும் எண்ணம் இயல்பாகவே உருவாகிவிட்டது. மேல்நிலை வகுப்பில் கற்கும் கல்வியே மாணவர்களது உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை அறிந்து, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். பல்வேறு போட்டிகளில் பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.

சென்னை அருகே பொன்னேரியில் உள்ள வேலம்மாள் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மேல்நிலை வகுப்பைத் தொடர்ந்தேன். நான் பயின்ற பள்ளியில் 2 ஆண்டுகள் நீட் பயிற்சிக்கான வகுப்புகள் நடத்தப்படுவதுடன், ஓ. எம். ஆர். முறையில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல், கடின உழைப்பு, பெற்றோர்களது ஒத்துழைப்பு ஆகியன எனது வெற்றியை உறுதி செய்தது.

சக மாணவர்களுடன் கூட்டுப் பயிற்சி எடுப்பதால் வினாக்கள் மீதான ஐயப்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தெரிந்தவை, தெரியாதவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் கூடுதல் அறிவு வளரும். என்னைப் பொறுத்தவரை தொடர் முயற்சியும், கூட்டுப் பயிற்சியும் இருந்தால் வெற்றி உறுதி.

தற்கொலைகள் தீர்வாகாது

பாடத் தேர்வுக்குத் தயாராவது போல் நீட் தேர்வுக்கும் தயாராக வேண்டும். இதில் சற்று கூடுதல் கவனம், ஆர்வம் செலுத்தினால் எளிதில் வென்றுவிடலாம். தற்கொலைகள் எந்த வகையிலும் தீர்வை ஏற்படுத்திவிடாது.

நீட் தேர்வு தொடர்பான மாதிரி வினாக்களின் தொகுப்புகள் இணையப் பக்கத்தில் ஏராளமாக உள்ளன. கைப்பேசி பயன்பாட்டை முடிந்த அளவுக்குக் குறைத்தால் நமக்கு அதிகம் நேரம் கிடைக்கும். அந்த நேரத்தைப் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுச்சேரி ஜிம்பரில் எம். பி. பி. எஸ் முடித்து, பின்னர் ஆசிரியர்கள், பெற்றோர் வழிகாட்டுதலுடன் எனக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் சேவை செய்யவேண்டும் என்பதுதான் எனது எதிர்காலத் திட்டம்'' என்கிறார் அ.வே. வேங்கடபதி வேலாயுதம்.

'மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சவாலாக உள்ள நிலையில், எங்களது மகனுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இறைவன் அருளால் வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் நன்குப் பயன்படுத்தி, நல்லமுறையில் மருத்துவக்கல்வியைப் பயின்று மருத்துவச் சேவையைத் தொடர வேண்டும்'' என்கின்றனர் அஞ்சன் ராமச்சந்திரநாத்- புனிதவதி தம்பதியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments