ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றி.
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கூடிய விரைவில் அமெரிக்காவில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் இன்றி இயக்கப்படும்.
நீண்ட தொலைவுகளுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை தானியங்கி முறையில் இயக்குவதன் மூலம் பெருமளவில் எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் பகுதியில் தானியங்கி லாரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த அரோரா இன்னோவேஷன் என்ற நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் இறங்கியது.
அதன்படி, 80 ஆயிரம் பவுன்ட் எடை கொண்ட கனரக வாகனத்தை (லாரி) நெடுஞ்சாலைகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அந்நிறுவனம் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.
ஆற்றங்கரையையொட்டி பயணிக்கும் மூன்றுவழிச் சாலையில் இச்சோதனை செய்யப்பட்டது. முழுக்க முழுக்க ரேடார், கேமரா சென்சார், 25 லேசர் மூலம் தானியங்கி முறை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 400 மீட்டருக்கு முன்பு வாகனங்கள் அல்லது ஏதேனும் தடுப்பு தென்பட்டால், கனரக வாகனம் தானாக மாற்று பாதையை தேர்வுசெய்துகொள்ளும். நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றுவழிச் சாலைகளில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தலாஸ் முதல் ஹுஸ்டன் வரை 20 தானியங்கி கனரக வாகனங்கள் முதல்கட்டமாக இயக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உடன் ஒரு நபரும் அனுப்பப்பட்டனர். இந்த சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது.
கனரக வாகனங்களை தானியங்கி முறையில் இயக்குவதால், பெருமளவு எரிபொருள் சேமிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தானியங்கி முறையில் கனரக வாகனங்களை இயக்குவதன் பாதுகாப்புத்தன்மை குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 66 சதவிகிதத்தினர் எதிர்மறையாக வாக்களித்துள்ளனர்.