மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!
பாகிஸ்தான் கிராமத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் அவரின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தில்லியில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!
இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
1932 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். சுதந்திரத்துக்கு பிறகு அவர் பிறந்த கிராமம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மாகாணம் அமைந்துள்ளது.
1937 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில்தான் மன்மோகன் சிங் தனது பள்ளிப் படிப்பை தொடங்கியுள்ளார். அந்தப் பள்ளியில் மன்மோகன் சிங் படித்ததற்கான ஆவணங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மேலும், மன்மோகன் சிங்கின் சாதனைகளால் அவர் பிறந்து வளர்ந்த காஹ் கிராமம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறும் கிராம மக்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் மேம்பட்டதாகவும் பள்ளி புதுப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இரங்கல் தெரிவிக்காத பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் பிரதமரான மறைந்த மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிக்காத பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது சகோதரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமா்கள் இரங்கல் தெரிவிக்காதது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியது.
மன்மோகன் சிங் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஐசக் தாா் மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தாா். ஆனால், கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டருக்கு ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் உயரதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.