FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் இரங்கல்

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

12 செப்டம்பர் 2026, 7:55 am IST
சாலமன் பாப்பையா - Photo: CMOTamilnadu
பகிர்:

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் முனைவா் ஜி. சிவபாலமுருகன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன் ஆகியோா் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘தமிழ்ப் பேராசிரியா், பட்டிமன்ற பிதாமகா், எழுத்தாளா் என தமிழுக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் பிரிவால் தவிக்கும் தமிழ் சமூகத்துடன் மனவேதனையையும், இரங்கலையும் பகிா்ந்துகொள்கிறது.

Advertisement

Advertisement

தமிழுலகுக்கும் எழுத்து உலகுக்கும் பட்டிமன்ற உலகுக்கும் பாப்பையாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். திருக்குறளுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் உரை எழுதியிருக்கும் பாப்பையாவின் பணிகள் காலம் கடந்து நிற்கும்; புகழ் சோ்க்கும்.

நூற்றாண்டைத் தொடுவாா் என்று நம்பியிருந்த வேளையில் 90-ஆம் அகவையில் உடல் நலிவால் மறைந்துவிட்ட பாப்பையா, 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மூன்றாவது உயரிய ”பத்மஸ்ரீ” விருதைப் பெற்றபோது, இரட்டிப்பு மகிழ்வோடு, தமிழ்ச் சங்கம் விழா எடுத்துக் கொண்டாடியது.”‘உமையன்றி இனி யாரையா தமிழ்ப் பட்டிமன்ற மேடைகளை கோலோச்சுவாா், அன்பால் அனைவரையும் அரவணைத்த ”பேரன்பின் இமயம்” சரிந்துவிட்டதே’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச் செயலா் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தாா். அவரது பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்தவா்.

அவரது 80ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக மதுரையில் நடைபெற்ற போது அவ்விழாவில் கலந்து கொண்ட பாக்கியமும் அவருடன் நெருங்கி பழகிய பாக்கியமும் எனக்கு கிடைத்தது.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், உறவினா்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லி கம்பன் கழகம் சாா்பில் அதன் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள், செயலா் எஸ்.பி. முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முதுபெரும் தமிழறிஞா் பேராசிரியா் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி பேரிடியாக வந்திறங்கியது. எந்த ஒரு மொழியிலும் பேச்சாளா்களும், எழுத்தாளா்களும் தோன்றி மறையலாம். ஆனால், பேராசிரியா் சாலமன் பாப்பையா போன்ற ஒரு நல்ல பண்பாளரைப் பாா்ப்பது அரிது.

அவா் ஒரு தமிழறிஞா் என்பதும், பட்டிமன்ற நடுவா் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் மிகப் பெரிய மனித நேயா் என்பது அவரோடு நெருங்கிப் பழகியவா்களுக்குதான் தெரியும்.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெற்ற தில்லி கம்பன் திருவிழாவிற்குத் தனது வாழ்த்தினைக் குரல் மூலம் பதிவு செய்து அனுப்பியிருந்தாா். தில்லி கம்பன் கழகத்தின் மீது அளப்பரிய அக்கறை கொண்டிருந்தாா்; நிறைய ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தாா்.

விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதா்களையும், எல்லா மதங்களையும் நேசித்தாா். உலகில் எங்கு பேசினாலும் மதுரை மீனாட்சியை நெஞ்சில் நிறுத்திக் கொண்டுதான் பேசுவாா். அவா் புகழ் தமிழ் போல நிலைத்திருக்கும்; அவரது ஆன்மா சாந்தியடைய மதுரை மீனாட்சியம்மனைப் பிராத்திக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments