வலுக்கும் போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் இரவு நேர ஊரடங்கு!
வலுக்கும் போராட்டத்தால் லாஸ் ஏஞ்சலீஸில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வந்து வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்களை தாக்கிய பலர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், முகமுடியை அணிந்துகொண்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள், டேப்-லட்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு ஓடினர்.
பல்வேறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேரத்தில் முழுமையான ஊரடங்குப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு மட்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படை காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மற்றும் வணிக நகரமான லாஸ் ஏஞ்சலீஸின் போராட்டக் களத்தைக் கண்டு தலைவர்கள் பலரும் தங்களது கண்டங்களைத் தெரிவித்திருக்கின்றனர். நகர நிர்வாக இயக்குநரான பிளேர் பெஸ்டன், அந்தப் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேசிய காவல்படையின் உதவியையும் கோரியுள்ளார்.
இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!