அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை...
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்தது.
இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், சேகரித்துள்ள யுரேனியம் செறிவூட்டல்களை ஒப்படைக்க ஈரான் முன்வந்துள்ளதாகவும் கூறினார். ஆனால், யுரேனியம் செறிவூட்டல்கள் ஒப்படைக்கப்படாது என ஈரான் அரசு மறுத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரானிய துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்படும் என ஈரான் அரசு சனிக்கிழமை அன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஈரானிய நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறக்கப்படாது எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி பேசியதாவது:
“ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதும் மூடக்கப்படுவதும் இணையத்தளம் வழியாக நடைபெறும் செயல் அல்ல, அவை களத்தில் முடிவு செய்யப்படுபவை. எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களின் ஆயுதப்படைகளுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Iran has warned that the Strait of Hormuz will be closed again if the US blockade continues.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.