வெனிசுவேலா இடைக்கால அதிபர் நாளை இந்தியா வருகிறார்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வருவது குறித்து...
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோரைக் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க படைகள் நாடு கடத்திச் சென்றன. பல்வேறு குற்றவழக்குகள் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வரும் ஜூன் 3 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி வரையிலான டெல்சி ரோட்ரிக்ஸின் இந்திய பயணத்தில் வெனிசுவேலாவின் முக்கிய அமைச்சர்களும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அதிபர் டெல்சி இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வெனிசுவேலாவின் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்திருந்தார்.
பின்னர், துணை அதிபராகப் பதவி வகித்தபோது கடந்த 2019, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்திய பயணத்தை மேற்கொண்ட டெல்சி ரோட்ரிக்ஸ் 6 ஆவது முறையாக நாளை இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.